

விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகர் அருளை பெறுவதற்குரிய நாளாகும். இந்நாளில் விநாயகப் பெருமானின் புகழ்பெற்ற, சிறப்பு மிக்க தலங்களுக்கு சென்று வழிபட்டால் விநாயகரின் பரிபூரண அருளை பெற முடியும். அத்தகைய சிறப்புமிக்க தலங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
விழுப்புரம் மாவட்டம் தீவனூர் கிராமத்தில் நெற்குத்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு விநாயகர், லிங்க வடிவத்தை போன்ற திருமேனியில் அருள்பாலிக்கிறார். அபிஷேகம் செய்யும்போது, லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். இவர் 'பொய்யாமொழி விநாயகர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
பிறர் பொருளை ஏமாற்றுபவர்கள், பொய் கூறுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து விநாயகர் முன் சத்தியம் செய்யும் நடைமுறை உள்ளது. இக்கோவிலின் பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தவாறு மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. அவை சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரை குறிப்பதாக கூறுகின்றனர்.
புதுச்சேரியில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் இக்கோவிலில், 108 விநாயகர்களை தரிசிக்க முடியும். இக்கோவில் விமானம் தங்க தகடால் வேயப்பட்டுள்ளது. இங்கு விநாயகருக்கு தனிப் பள்ளியறை இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.
ஒரு காலத்தில் மணல் நிறைந்த குளத்தின் அருகில் இந்த விநாயகர் அருள்பாலித்ததால் மணல் குளத்து விநாயகர் என்று அழைக்கப்பட்டார். பின்னர், அதுவே மருவி 'மணக்குள விநாயகர்' என்றானது.