

ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை, சத்தியவேடு சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் மனீஷ்குமார். நேற்று மதியம் இவரது கடைக்கு வாலிபர் ஒருவர் வந்தார்.
புதிய டிசைன் நகைகளை காண்பிக்கும்படி அவர் கூறினார். இதையடுத்து மனீஷ்குமார் ஒவ்வொரு நகையாக எடுத்து காண்பித்தார். பின்னர் வேறு ஒரு நகையை எடுப்பதற்காக திரும்பினார்.
இதனை பயன்படுத்தி மர்ம வாலிபர் 5 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மனீஷ்குமார் அவரை பிடிக்க முயன்றும் முடியவில்லை.
இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலு, நகை கடையில் பொருத்தி இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான வாலிபரின் படத்தை வைத்து விசாரணை நடத்தி வந்தார்.
இதற்கிடையே சத்தியவேடு பகுதியில் உள்ள அடகு கடையில் கொள்ளையடித்த நகையை அந்த வாலிபர் அடகு வைத்தார். சந்தேகம் அடைந்த அடகு கடை உரிமையாளர், வாலிபரிடம் பேச்சு கொடுத்தபடியே சத்தியவேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மதனம்பேடு கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் என்பதும், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
வினோத்குமார் போலீசாரிடம் கூறும்போது, ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரது பிறந்தநாளையொட்டி பரிசு கொடுக்க பணம் இல்லாததால் நகையை திருடியதாகவும் தெரிவித்தார்.
அவர் இதுபோல் வேறு எந்த கொள்ளை, திருட்டில் ஈடுபட்ட உள்ளாரா? என்பது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.#birthdaygift #girlfriend