

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட இரு வேறு தாக்குதல்களில் 25 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல்களுக்கு பலுசிஸ்தான் விடுதலைப் படை பொறுப்பேற்றுள்ளது. பலுசிஸ்தானின் ஜியாரத் மற்றும் சுரப் மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
இந்த தாக்குதல்கள் தொடர்பான வீடியோவையும் பலுசிஸ்தான் விடுதலைப் படை வெளியிட்டு உள்ளது.
ஒரு நிமிடம் 11 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் தீப்பிடித்து எரிவதும், அதன் அருகே ஆயுதம் ஏந்திய பலுசிஸ்தான் விடுதலை படை அமைப்பினர் இருப்பதும், உடல்கள் சாலையில் கிடப்பதும் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சமீப நாட்களாக பலுசிஸ்தான் முழுவதும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் காவல் படைகளை குறிவைத்து பலுசி ஆயுதக் குழுக்கள் நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்து, பெரும் உயிரிழப்புகளும், உள்கட்டமைப்பு சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த மாதம், பலுசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட 36 நடவடிக்கைகளுக்கு பலுசிஸ்தான் விடுதலைப் படை பொறுப்பேற்றது. இதில் 33 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அது கூறியது.
பலூசிஸ்தானின் “தேசிய விடுதலை இலக்கு” அடையப்படும் வரை பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான தங்களது தாக்குதல் நடவடிக்கை தொடரும் எனவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.