

பெங்களூரு :
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் இதுவரை பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கல்லூரிகள் வருகிற 17-ந் தேதி திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. அதனால் பள்ளிகளையும் திறக்கலாம் என்று அரசு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தினார்.
பள்ளி கல்வித்துறை கமிஷனர், அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனைகளை கேட்டறிந்தார். பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் அவர் கேட்டறிந்தார். அந்த கருத்துகளை உள்ளடக்கி ஒரு அறிக்கையை அந்த கமிஷனர் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை பள்ளி கல்வித்துறை கமிஷனர் இன்று (திங்கட்கிழமை) முதன்மை செயலாளர் உமாசங்கரிடம் தாக்கல் செய்கிறார். அந்த அறிக்கை மந்திரி சுரேஷ்குமார் மூலம் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.