டெல்லியில் மீண்டும் ஒரு ஜாலியன் வாலாபாக் - மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்

ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்த ஜாலியன் வலாபாக் படுகொலை போன்றது என உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே
Published on

மும்பை:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கற்கள் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தும் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், மாணவர்களின் போராட்டத்தின்போது, மாணவர்களை நோக்கி போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மும்பையில் இன்று பேட்டியளித்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ‘ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் நடந்தது ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்று உள்ளது. 

மாணவ சமுதாயம் ’இளைய வெடிகுண்டு’ போன்றது. மாணவர்களிடம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்’ என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com