

சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நற்பணி இயக்கமாக இருந்த போதே நம் மன்றத்திற்காக 2000-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மூவர்ண கொடியாக சிவப்பு, மஞ்சள், கருப்பு நிறம் கொண்ட புரட்சி தீபத்துடன் நம் கொடி அறிமுகம் ஆனநாள் இன்று(12.02.2018).
18-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை எண்ணி நாம் அனைவரும் பெருமைபடுவோம். 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் உருவான போது, நம் மன்றக்கொடியை, கட்சி கொடியாக மாற்றி, எந்த ஒரு கட்சியிலும் இல்லாத பெருமையாக நம் கொடி அறிமுக நாளை ஆண்டுதோறும் விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடும் ஒரே கட்சி நமது தே.மு.தி.க. தமிழகம் முழுவதும் நம் கொடி பட்டொளி வீசி பறக்க காரணமான நம் கழகத்தை சார்ந்த அனைவருக்கும், இந்த நல்ல நாளில் எனது நன்றியையும், சந்தோஷத்தையும்தெரிவித்துக்கொள்கிறேன்.
நம் கொடி மூன்று வர்ணங்களை கொண்டு நம் கொள்கைகளையும், இலட்சியத்தையும் நம் நாட்டிற்கு எடுத்து சொல்லும் விதமாக சிவப்பு வறுமையை போக்கவும், மஞ்சள் வளமையை பெருக்கவும், கருப்பு ஜாதி, மதம், லஞ்சம், ஊழலை ஒழிக்கவும், நம் புரட்சி தீபம் மூலம் ஒளிமயமான தமிழகத்தை கொண்டு வருவோம் என்ற கொள்கையோடு, லட்சியத்தோடு கொடி உருவான இந்த நாளை, தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எங்கும் கொடி ஏற்றி, நம் கொள்கைப்படி “இயன்றதை செய்வோம் இல்லாதவற்கே” என இந்த நல்ல நாளில், நம்மால் இயன்ற உதவிகளை நம் மக்களுக்கு வழங்குவோம். நல்லவர்கள் இலட்சியம்! வெல்வது நிச்சயம்!! என்ற சொல்படி நல்ல எண்ணங்களோடு நம் கழகத்தையும், நம் நாட்டையும் காப்பாற்றுவோம் என்று நாம் அனைவரும் இந்த நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இன்று தே.மு.தி.க. அலுவலகத்தில் நடந்த கொடி நாள் விழாவில் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். #Vijayakanth #tamilnews