

மதுரை:
மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டிற்கு சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறது. பெரியார் அணை இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது. ஆனால் 999 வருட குத்தகை ஆணை கொடுத்து விட்டோம். அந்த அணையை உடைத்து புதிய அணை கட்ட வேண்டும். இல்லை என்றால் 5 மாவட்டங்கள் நீரில் மூழ்கி விடும் என்று கேரள அரசு கூறுகிறது.
முல்லை பெரியாறு அணை வலுவாக இருக்கிறது. ஆனால் அவர்கள் குறும்படம், திரைப்படம் எடுத்து வெளியிடுகின்றனர்.
கேரளாவில் வெள்ளம் வந்தபோது தமிழ்நாடு முழுவதுமாக அனைத்து தரப்பு மக்களும் தங்களது சகோதரனாக கேரள மக்களை நினைத்து நிவாரணம் வழங்கினர்.
ஆனால் கேரள அரசு அப்போது ஏற்பட்ட வெள்ளத்துக்கு முல்லை பெரியாறு அணை தான் காரணம் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளது.
கேரளாவில் வாக்கு வாங்குவதற்காக பா.ஜ.க அரசின் வனத்துறை மூலம் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டிக்கொள்ள தடையில்லா சான்றிதழ் கொடுத்துள்ளது. இதன் காரணமாக முல்லை பெரியாறு அணை வாயிலாக பாசன வசதி பெறும் 5 மாவட்டங்கள் நேரடியாக பாதிக்கப்படும். மோடி அரசு தமிழகத்திற்கு செய்த வஞ்சகம், துரோகத்தை மன்னிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #vaiko #pmmodi #mullaiperiyardam