உளுந்தூர்பேட்டையில் விபத்து- டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பலி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உளுந்தூர்பேட்டையில் விபத்து- டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பலி
Published on

உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மாம்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிபுதுப்பட்டு பகுதியை சேர்ந்த கருணாகரன்(வயது 40) சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

இதேகடையில் உதவியாளராக உளுந்தூர் பேட்டை அன்னை சத்யா தெருபகுதியை சேர்ந்த சுரேஷ்(30) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு வழக்கம்போல் டாஸ்மாக் கடையில் வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு 2 பேரும் ஒரு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டனர்.

பின்னர் அவர்கள் சாப்பிடுவதற்காக உளுந்தூர்பேட்டை பகுதியில் எம்.எஸ்.தக்கா என்ற இடத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். அந்த பகுதியில் உள்ள சாலையை மோட்டார்சைக்கிளில் கடக்க முயன்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோட்டார்சைக்கிளில் இருந்து கருணாகரன், சுரேஷ் ஆகியோர் தூக்கிவீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுரேஷ் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உளுந்தூர் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த சுரேசை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com