கொஞ்சம் கூட பயம் இல்லை... டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டில் சமூக விலகலை மீறும் மக்கள்

டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி மார்க்கெட்டுக்கு வெளியே போக்குவரத்து நெரிசல்
டெல்லி மார்க்கெட்டுக்கு வெளியே போக்குவரத்து நெரிசல்
Published on

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய பழ-காய்கறி சந்தையான ஆசாத்பூர் சப்ஜி மண்டிக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த மார்க்கெட் செயல்பட அளிக்கப்பட்டுள்ளது. சமூக விலகலை பராமரிக்க ஏதுவாக சுழற்சி முறையில் வர்த்தகர்கள் வியாபாரம் செய்ய டோக்கன்கள் வழங்கப்படுகிறது. எனினும் சமூக விலகல் என்பது மார்க்கெட்டில் கேள்விக்குறியாகி வருகிறது.

காய்கறி ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் மார்க்கெட்டில் நெரிசல் அதிகரித்துள்ளது. மார்க்கெட்டுக்கு வெளியே உள்ள சாலைகளில் வாகனங்கள் அணிவத்து வருவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் சில இடங்களில் மட்டுமே வரிசையில் நின்று பொருட்கள் வாங்குகின்றனர். பெரும்பாலான கடைகளில் சமூக விலகல் விதிமுறைகள் மீறப்படுகின்றன. 

கொரோனா குறித்த அச்சமும் போதிய விழிப்புணர்வும் இல்லாமல் பொதுமக்கள் மார்க்கெட்டில் ஒன்றுகூடுவதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com