கருப்பு பணம் பதுக்கலுக்கு உதவியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் மோடி பேச்சு

கருப்பு பணம் பதுக்கலுக்கு உதவியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் நிறுவன தின விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கருப்பு பணம் பதுக்கலுக்கு உதவியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் மோடி பேச்சு
Published on

புதுடெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்ற சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் நிறுவன தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர், பாராளுமன்றத்தில் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது குறித்தும், அதற்காக ஆதரவு அளித்தமைக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.

இந்த விழாவில் மத்திய மந்திரி அருண்ஜெட்லி உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

இந்திய பொருளாதாரத்தின் தூண்கள் தான் சார்ட்ர்டு அக்கவுண்டண்டுகள். சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் கையெழுத்து என்பது பிரதமரின் கையெழுத்தை விட வலிமையானது. அரசின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அவர்கள் நடந்து கொள்ளக் கூடாது.

இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டுள்ளது.

வரி விதிப்பை சார்ந்துதான் நமது நாடு உள்ளது. இந்த வரி விதிப்பை சீர்படுத்தி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

நாங்கள் தூய்மையை வலியுறுத்தி சுத்தமான இந்தியா திட்டத்தைக் கொண்டு வந்தோம். நாட்டை ஏமாற்றியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இந்திய பொருளாதாரமும் சுத்தமான நிலையை அடைந்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தில் ஜிஎஸ்டி புதிய பாதை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிலர் கொள்ளையடித்து வருவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நாட்டில் ஊழலை ஒழித்துக்கட்ட மிகப்பெரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதற்கு மேற்கொண்ட முதல் முயற்சி தான் பணமதிப்பு இழப்பு. இதனால் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் கறுப்பு பணம் பதுக்கியதன் அளவு குறைந்துவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com