லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

அஜித் குமார், முதலமைச்சர் விஜயின் வருகை மற்றும் அவரது விளையாட்டுகளுக்கான ஆதரவு குறித்து மனமாரப் பாராட்டினார்.
CM VIJAY
Published on
Summary

அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டிற்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதோடு சர்வதேச விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் நேரில் பார்வையிட்டார்.

இங்கிலாந்தில் உள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய களத்தில் நடைபெற உள்ள 2026-ஆம் ஆண்டிற்கான 'மிச்செலின் லீ மான்ஸ் கப்' பந்தயத் தொடரின் 5-வது சுற்றை, தமிழக முதலமைச்சர் விஜய் [ஆசியப் பிரதிநிதியாகவும் சிறப்பழைப்பாளராகவும்] பங்கேற்றுப் பச்சைக்கொடி அசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார்.

திரையுலகில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாகக் கருதப்பட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய்யும் அஜித் குமாரும், சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் இணைந்து நிற்பது உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

44 பந்தயக் கார்களின் அணிவகுப்பு

இந்த மிச்செலின் லீ மான்ஸ் தொடரில் மொத்தம் 44 பந்தயக் கார்கள் பங்கேற்றுள்ளன. இந்த பிரம்மாண்டப் போட்டியைத் தொடங்குவதற்கான பச்சைக்கொடியை முதலமைச்சர் விஜய் முறைப்படி அசைத்துத் தொடங்கி வைத்தார். சர்வதேச பந்தய வீரராகக் களம் காணும் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பாக 16-ஆம் எண் கொண்ட 'Ligier' பந்தயக் காரை இயக்குகிறார். இப்போட்டியில் அஜித் குமாருடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக் இணை காரோட்டியாகப் பங்கேற்கிறார்.

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த அஜித்குமார்

இங்கிலாந்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் அஜித் குமார், முதலமைச்சர் விஜயின் வருகை மற்றும் அவரது விளையாட்டுகளுக்கான ஆதரவு குறித்து மனமாரப் பாராட்டினார். "கடந்த 34 ஆண்டுகளாகத் திரையுலகில் எனது நண்பராக பயணித்த தமிழக முதலமைச்சர் விஜய், தனது பிஸியான அதிகாரப்பூர்வ அட்டவணைக்கு இடையிலும் எங்களை ஊக்குவிக்கச் சில்வர்ஸ்டோன் வந்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள்" என்று அஜித் தெரிவித்தார்.

இந்தியாவில் சர்வதேசப் பந்தயங்கள்

"தமிழ்நாட்டில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இதுபோன்ற பந்தயங்களை வருங்காலத்தில் சென்னை மற்றும் இந்தியாவில் நடத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் திட்டமிடல்களைப் பார்வையிடவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது" என்றும் அஜித் குறிப்பிட்டார். இந்நிலையில், இப்போட்டியை தொடங்கி வைக்க லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய களத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் விஜயை கண்டதும் அங்கிருந்த அவரது ரசிகர்கள் ஆட்டோகிராப் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, இப்போட்டியை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com