தென்கிழக்கு டெல்லியின் ஓக்லா தொழில்பேட்டை பகுதி - 1 இல் உள்ள ஒரு தனியார் வணிகக் குடோனில் ஆக்சிஜன் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் மற்றும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காசியாபாத்திலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரியிலிருந்து, ஊழியர்கள் சிலிண்டர்களைக் கீழே இறக்கிக் குடோனுக்குள் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிலிண்டர் லாரியிலிருந்து நழுவி கீழே விழுந்ததில், அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த வெடிப்பின் தாக்கத்தால் அருகில் வேலை செய்துகொண்டிருந்த மோஹித் சிங் (35) என்ற ஊழியர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த மற்ற 4 ஊழியர்கள் உடனடியாக மீட்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறி, டெல்லி போலீசார் குடோன் உரிமையாளரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.