

சென்னை:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
டெல்லியில் மனிதவள மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த ஆண்டுக்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தரப்பட்டியலை ஜனாதிபதி வெளியிட்டார். அதில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாநில கல்லூரி, லயோலா கல்லூரி ஆகியவை பட்டியலில் முதன்மை இடங்களை பிடித்திருப்பது மிகுந்த பெருமை அளிப்பதாக உள்ளது.
பல்கலைக்கழகங்கள் வரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் 7-வது இடத்தையும், பொறியியல் கல்வி நிறுவனங்கள் 9-வது இடத்தையும் பிடித்திருப்பதற்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். கல்லூரிகள் வரிசையில் மாநில கல்லூரி 3-வது இடத்தையும், லயோலா கல்லூரி 6-வது இடத்தையும் பெற்றிருப்பது, உயர் கல்வியில் அவர்களின் சிறப்பான செயல்பாட்டினால் கிடைத்த இடமாகும்.
இந்த புகழுக்கும், சாதனைக்கும் கடுமையாக உழைத்த துணைவேந்தர்கள், முதல்வர்கள், மாணவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNGovernor #AnnaUniversity