

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக மக்களவையில் தொடர்ந்து குரல் எழுப்பிய அதிமுக எம்பிக்கள் 31 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் ஜனநாயக வழியில் போராடினார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.
இதற்காக ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய எம்பிக்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இத்தகைய செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்த போராட்டம் இதோடு நின்றுவிடாது. அவைக்கு வராவிட்டால்கூட பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்
காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் பாராளுமன்றத்தில் இணக்கம் உள்ளது. இதைத் தான் கேம் பிக்சிங் என்பார்கள். மேகதாது விவகாரத்தை மறைக்கவே ரபேல் விவகாரத்தை காங்கிரஸ் எழுப்புகிறது. ரபேல் விவகாரத்திற்குப் பதிலளிப்பதுபோல் மேகதாது விவகாரத்தை பாஜக மறைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #MakedatuIssue #Thambidurai