

பிளஸ் 1 மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை குறித்து அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை அளித்தார்.
அப்போது, மக்கள் நலன் என்று கூறி தன் மக்கள் நலனை மட்டும் பார்த்தனர் என எம்ஜிஆர் பாடல் பாடி அமைச்சர் சம்பத்குமார் உரையாற்றினார்.
இதற்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும் அமைச்சர் பாடிய எம்ஜிஆர் பாடலுக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை என கே.என்.நேரு விமர்சித்தார்.
தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதவது:-
விஜய் தமிழ்நாடு முதலமைச்சராவார் என 12 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர் அமைச்சர் ஆனந்த்.
திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாத நிலை இருக்க கூடாது, வாய்ப்பு கிடைத்தால் எந்த சமூகமும் உயரும்.
பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு தலைமுறையை மாற்ற வேண்டுமென்றால் அந்த தலைமுறைக்கு கல்வியை கொடுக்க வேண்டும்.
5 லட்சம் மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி வழங்குவதற்கு 11 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
விடுதிகளில் காலி பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
575 விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாதந்தோறும் விடுதியில் ஆய்வு நடைபெறுகிறது. மாணவர் விடுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கனவுகளுடன் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதியும் செய்து கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
விடுதியை ஆய்வு செய்தபோது மாணவர்களுடன் உரையாடிய முதலமைச்சர், எங்களை அழைத்து அறிவுறுத்தினார்.
ஆபத்து காலத்தில் காக்கும் 108 ஆம்புலன்ஸ்போல் தமிழக மக்கள் அச்சம் போக்க தவெகவுக்கு 108 எம்எல்ஏக்களை கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.