எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக மாலை அணிவிப்பு

தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லம், ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டம் ஆகிய இடங்களுக்கு சென்று ஓ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினார்.தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக மாலை அணிவிப்பு
Published on

சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை குறிப்பிடும் வகையில் 106 கிலோ பிரமாண்ட கேக்கும் வெட்டப்பட்டது. அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கோகுலஇந்திரா, வளர்மதி, பொன்னையன் மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்யா, அசோக், கே.பி.கந்தன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர், வக்கீல் சதாசிவம், பெரும்பாக்கம் ராஜசேகர், டாக்டர் சுனில், முகப்பேர் இளஞ்செழியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வி.எஸ்.பாபு, ஈஸ்வரன், சைதை கடும்பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தில் பணிபுரிந்து மரணம் அடைந்த சந்திரசேகரன், குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் மற்றும் அ.தி.மு.க. கொடியை கட்டும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொண்டர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், வெல்ல மண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகரன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணை செயலாளர் மங்காராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லம், ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டம் ஆகிய இடங்களுக்கும் சென்று ஓ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com