

தமிழ் நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளார். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மூன்று முறை முதலமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார். மேலும் துணை முதலமைச்சர், நிதி அமைச்சர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
அ.தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஓ. பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் போடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீரென பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறை சார்பில் அவருடைய வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப் பட்டுள்ளது.
அவருடைய வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆயுதப்படை பிரிவுக்கு திரும்ப அழைக்கப்பட்டனர். அதுபோல், 'வி.ஐ.பி.' வாகன பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அவருக்கான பாதுகாப்பு 'ஒய்' பிரிவில் இருந்து 'எக்ஸ்' பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. 'எக்ஸ்' பிரிவு என்பது அடிப்படை பாதுகாப்பு ஆகும்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் 'அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வு' மேற்கொள்ளப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்ட 'ஒய்' பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது" என்றனர்.
முன்னதாக முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு இருந்த பாதுகாப்பும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.