

திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் Fair Delimitation என்பதிலும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை.
இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது, முதலமைச்சர் கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா?
காவிரிக்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.
உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.