நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்: ஐகோர்ட்டு நீதிபதி கருத்தால் பரபரப்பு

லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை மோசமாக உள்ளது.தனிப்பட்ட காரணங்களுக்காக நான் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை.
நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்: ஐகோர்ட்டு நீதிபதி கருத்தால் பரபரப்பு
Published on

சென்னை:

அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதான வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது:-

லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை மோசமாக உள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கில் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்து ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்து விசாரணை அதிகாரி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் மேல்விசாரணை கோரி தாக்கல் செய்த மனு அடிப்படையில் விசாரணை நடத்திய அதே புலன் விசாரணை அதிகாரி வழக்கை முடித்து வைக்க வேண்டும். ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ள யாரும் விரும்பவில்லை. அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை பொறுத்தவரை விடுவிக்க கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவும் ஐகோர்ட்டினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில் சிறப்பு கோர்ட்டு அவரை விடுவித்து இருக்கிறது.

கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை எல்லாம் பார்க்கும்போது உண்மையில் நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். விடுதலையான, விடுவிக்கப்பட்ட இதுபோன்ற அரசியல்வாதிகளின் வழக்குகளை எல்லாம் மறு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளும் என்னை சிலர் வில்லனாக பார்க்கின்றனர். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக நான் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐகோர்ட்டு நீதிபதியின் இந்த கருத்து நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com