

எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 15-ந்தேதி முதல் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் திருவள்ளூர், புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இடையில் சில நாட்கள் ஆலோசனை நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் மீண்டும் ஆலோசனை மேற்கொள்கிறார். இன்றைய கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளை தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடனும், 22-ந்தேதி திருப்பூர், நாமக்கல், வட சென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் 23-ந்தேதி கோவை, திண்டுக்கல், வட சென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.
24-ந்தேதி விழுப்புரம், திருவாரூர், சேலம் மாவட்ட நிர்வாகிகளும் 25-ந்தேதி கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை, திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.
சென்னையில் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலில் தலைநகரில் தொடர்ந்து தோல்வியை தழுவுவது ஏன்? என்பது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் அவர் விளக்கங்களை கேட்டு அதற்கான காரணத்தை கண்டறியவும் உத்தரவிட இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.