அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா- முதலமைச்சர் விஜய்

சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on
Summary

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி அண்ணாசாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். மேலும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். மேலும் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக உள்ளிட்ட பிற கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனிடையே, அரசியல் தலைவர்கள் அண்ணாவை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அண்ணாவின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில்,

தனி முத்திரை பதித்தவர்

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் பேராதரவோடு ஆட்சிப்பொறுப்பேற்று, தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

“கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு”, "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" போன்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்! என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com