

செங்கோட்டையில் வெறும் விளம்பர வெளிச்சத்திற்காக பேசிய பிரதமரே இளைஞர்கள் வாழ்வோடு விளையாடாதீர் எனவும் நிர்வாக சீட்கேட்டை புள்ளிவிவரங்களே அப்பட்டமாக சொல்கின்றன. இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr.Prime Minister எனவும் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நேற்றைய மோடியின் பேச்சுக்கும், நிஜமான கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி!
மோடி அரசின் பிரம்மாண்ட விளம்பரங்களுக்குப் பின்னால் இருக்கும் அவலங்களை, நாடாளுமன்ற நிதிக் குழுவின் 40-வது அறிக்கை தோலுரித்துக் காட்டியுள்ளது.
5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதாக ரூ.63,000 கோடியில் தொடங்கப்பட்ட பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது.
2024-25 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ₹2,000 கோடியில் வெறும் ரூ.29.29 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு, 98.5% நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பியனுப்பப்பட்டுள்ளது.
தொழிற்துறையினர் மூலம் 2.45 லட்சம் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகக் கூறிய நிலையில், சேர்ந்தது வெறும் 16,060 பேர் மட்டுமே. அதிலும் 53.6% பேர் பாதியிலேயே வெளியேறியுள்ளனர்.
சொற்ப உதவித்தொகை, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கிராமப்புற இளைஞர்களும் பெண் வேட்பாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கோட்டையில் வெறும் விளம்பர வெளிச்சத்திற்காகப் பேசிவிட்டு, நிதியைப் பயன்படுத்தும் திறனின்றி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். உங்கள் நிர்வாகச் சீர்கேட்டைப் புள்ளிவிவரங்களே அப்பட்டமாகச் சொல்கின்றன.
இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.