பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஒரிஜினல் ஆடியோவும் உள்ளது- அண்ணாமலை பரபரப்பு பேட்டி

கலைஞர் டி.வி.யில் கனிமொழி பங்குதாரர் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.வழக்கு கோர்ட்டுக்கு வரட்டும். கோர்ட்டில் சொல்வதற்கு இன்னும் பல விஷயங்கள் உள்ளன.
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஒரிஜினல் ஆடியோவும் உள்ளது- அண்ணாமலை பரபரப்பு பேட்டி
Published on

சென்னை:

சென்னை நடுக்குப்பத்தில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மன நிலையை வாக்குகளாக மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க.வும் உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளை கைப்பற்றுவதுதான் எங்கள் இலக்கு.

தி.மு.க.வினர் மீது நான் சொத்துப் பட்டியல் வெளியிட்டதற்காக கனிமொழி எம்.பி. நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் அவர் கலைஞர் தொலைக்காட்சியில் தான் பங்குதாரர் இல்லை என்று குறிப்பிடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்ததாகவும், அதன்பிறகு பங்குகளை விற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதாவது அவர் பங்குதாரராக இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். பங்குகளை விற்றிருந்தால் அந்த பணம் எங்கே போனது? ஒவ்வொருவரின் சொத்து மதிப்புதான் எனது குற்றச்சாட்டு.

நிதிஅமைச்சர் பழனி வேல் தியாகராஜனின் ஆடியோ என்பது அவர் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம். இந்த விஷயத்தில் அவர் குற்றவாளி இல்லை. என்ன நடக்கிறது என்பதைத்தான் தெரிவித்து இருக்கிறார். வழக்கு கோர்ட்டுக்கு போகும்போது அவர் பேசிய ஒரிஜினல் ஆடியோவையும், எங்கே, எப்போது, யாரிடம் பேசப்பட்டது என்பதையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

கட்சியின் தலைவர் பதவியில் இருக்கும் எனக்கு, எனக்கான பாதையை அமித்ஷா, நட்டா ஆகியோர் ஏற்கனவே வகுத்து தந்துவிட்டார்கள். இப்படித்தான் நீங்கள் செயல்பட வேண்டும் என்று அவர்கள் கொடுத்த அறிவுரைகளை ஏற்பது தான் எனது வேலை.

மெட்ரோ ரெயில் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. யிடம் நான் புகார் கொடுத்து உள்ளேன். ஜி ஸ்கொயர் சோதனைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த நிறுவனம் பற்றி நான் புகார் அளிக்கவும் இல்லை. 6 நாட்கள் சோதனை நடந்ததில் இருந்து ஏதோ பெரிய விஷயம் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.2010 கோடி சொத்து மதிப்பு என்று நான் தெரிவித்ததை அவர் இல்லை என்று மறுத்து உள்ளார். ஒருவேளை நமது சொத்து மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடியாச்சே. ரூ.2000 கோடி என்று குறைத்து சொல்லிவிட்டாரே என்று வருத்தப்படுகிறாரோ என்னவோ? வழக்கு கோர்ட்டுக்கு வரட்டும். கோர்ட்டில் சொல்வதற்கு இன்னும் பல விஷயங்கள் உள்ளன.

நான் சொத்து மதிப்புகளை வங்கி ஸ்டேட்மெண்டுடன் வெளியிட்டுவிட்டேன். தி.மு.க.வினர் குறைந்தபட்சம் ஒருமாத ஸ்டேட்மெண்டை வெளியிட்டுவிட்டு பேசட்டும் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com