

பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து சிலிண்டர் பெற்றவுடன், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பட்டியல் பெற்று சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
சட்டசபையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-
நமது அரசின் பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு இதுவரை சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம், அண்ணனின் சீர் திட்டம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் நமது அரசு மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தினை முதன்மை நோக்கமாக கொண்டு வெற்றி தொலை நோக்கு திட்ட ஆவணத்தினை வெளியிட்டுள்ளது. அந்த திட்ட ஆவணத்தின் அடிப்படையில் இலக்கு நிர்ணயம் செய்து பல்வேறு திட்டங்கள், அடுத்து வருகின்ற முதலாம், மூன்றாம், ஐந்தாம் ஆண்டிற்குள் நிறைவேற்றத்தக்க திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து இவ்வரசு நிறைவேற்றும்.
கடந்த 4 மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மாற்று எரிபொருளை பயன்படுத்தி வருவதாலும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினாலும் பொது மக்கள் தங்களது வருவாயில் இருந்து கூடுதலாக தொகையினை செலவிட்டு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு நிதி நெருக்கடியான சூழலிலும் பொது மக்களிடம் நிதிச் சுமையினை குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் நலனை பாதுகாக்கவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கிலும் எரிவாயு சிலிண்டருக்காக செலவழிக்கப்பட்டு வரும் தொகையினை அவர்களுக்கு வழங்க இவ்வரசு முடிவு செய்துள்ளது.
எனவே குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.
எரிவாயு சிலிண்டருக்கான விலை பயானிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்ட பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து சிலிண்டர் பெற்றவுடன், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பட்டியல் பெற்று சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தினால் சுமார் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவார்கள். அதாவது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயன் அடைவார்கள்.
இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் வரும் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் முதல் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்படும். இத்திட்டத்துக்காக ஆண்டு தோறும் தோராயமாக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.