

ஆசிரியர்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெற அரசு வகை வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏணியாகவும், தோனியாகவும் இருந்து மாணவர்களை ஏற்றம் பெறவும், வாழ்வில் கரை சேரவும் வகை செய்யும் ஆசிரியர்களை பெருமைப்படுத்துவதற்கான ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் அனைவரின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் ஆத்மாக்கள் ஆசிரியர்கள் தான்; அதேபோல், மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படாமல், மகிழ்ச்சியடையும் மகாத்மாக்களும் ஆசிரியர்கள் தான். அதனால் தான் அவர்கள் அனைவராலும் வணங்கப்படுபவர்களாக உள்ளனர். இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களை இந்த சமுதாயம் போற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாள் என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே கொண்டாடும் நிலையை மாற்றி ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் நிலையை உருவாக்க வேண்டும். அது தான் நமது சமுதாயத்தை வளர்ப்பதற்காக உழைக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.
உலகில் அனைவராலும் கொண்டாடப்படுபவர்களாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அரசர்களாலும் மதிக்கப்படுபவர்கள் அவர்கள் தான். ஆனால், அவர்கள் வாழ்க்கை மட்டும் கொண்டாட்டமானதாக இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம், சமவேலைக்கு சம ஊதியம், தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு என பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத கோரிக்கைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு புதிய நெருக்கடி ஒன்றும் உண்டாகியுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் 2028 ஆகஸ்ட் மாதத்திற்குள் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது தான் இதற்கு காரணமாகும். ஆசிரியர்களின் இந்த நெருக்கடியைப் போக்க கடந்த திமுக ஆட்சி மட்டுமின்றி, புதிய தவெக ஆட்சியும் எதுவும் செய்யாததால் ஆசிரியர்களின் நெருக்கடிகள் தொடர்கின்றன.
ஆசிரியர்கள் கவலையின்றி வாழ்ந்தால் தான் மாணவர்களை முன்னேற்ற முடியும். அதற்கு வசதியாக ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுடன், தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களையும் குறைந்தபட்சம் 35% ஆக குறைக்க வேண்டும். இதன் மூலம் ஆசிரியர்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெற அரசு வகை வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.