சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை- எச்.ராஜா பேட்டி

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 131 கொலைகள் நடைபெற்று உள்ளன.மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசு தான் மேம்படுத்த வேண்டும்.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை-  எச்.ராஜா பேட்டி
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி இளம்படுகர் சங்க கட்டிடத்தில் நீலகிரி முன்னாள் பா.ஜ.க. எம்.பி. மாஸ்டர் மாதன் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு மாதன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் திருப்பூரில் வருகிற 11-ந்தேதி மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் எதிர்கொள்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்க உள்ளோம். தொடர்ந்து மாநில நிர்வாகிகள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளது.

மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசு தான் மேம்படுத்த வேண்டும். ஆனால் விவசாயிகளுக்காக ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்கும் நிதிகள் முறையாக மக்களை சென்றடையவில்லை. அரசு அதிகாரிகளே போலி கணக்குகள் மூலம் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் பணத்தை மீண்டும் திரும்ப பெறும் வகையில் மத்தியஅரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்து உள்ளது என்பதற்கு உதாரணம் காவல்நிலையம் மீதான பெட்ரோல் குண்டு வீச்சுதான். சட்டத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. நடிகர் கவுண்டமணி சொல்வதுபோல அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று கூறுவது போல சட்டத்துறை அமைச்சர் செயல்படுகிறார்.

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 131 கொலைகள் நடைபெற்று உள்ளன. 1991-ம்ஆண்டுமுதல் 34 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் பொறுப்பில் உள்ளேன். ஆனால் நான் இதுவரை கூட்டணி குறித்து பதில் சொன்னது இல்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்வதும், யாருக்கு எந்த தொகுதி ஒதுக்குவது என்ற அதிகாரமும் பா.ஜ.க.வின் மேலிட தலைவர்களுக்கு தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com