தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா வைரசால் 80 சதவீதம் பேர் பாதிப்பு

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது கடினம். கேரளாவில் இருந்து வரும் மாணவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றார்.
ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்
Published on

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை தாக்கம் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட சில மாவட்டங்ளில் அதிகரித்து வந்த தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளது.

தொற்று பரவலை சுகாதாரத் துறை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறது. எந்த பகுதியில் எந்த இடத்தில் தொற்று அதிகமாக பரவுகிறது என்பதை கவனித்து அந்த பகுதியில் மரபணு சோதனை நடத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் 70 சதவீதம் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் 80 சதவீதம் பேருக்கு டெல்டா வகை வைரஸ் தொற்று பரவி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை டெல்டா வகை கொரோனா வைரஸ் மட்டுமே பரவி வருவதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சமீபத்தில் 2,150 பேருக்கு எடுத்து அனுப்பப்பட்ட மாதிரி சோதனையில் 80 சதவீதம் பேருக்கு டெல்டா வகை வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கேரளா, ஆந்திராவில் தொற்று பாதிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அனைத்து மாவட்டங்களுக்கும் சென்னையை போன்றே தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்படும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது கடினம். கேரளாவில் இருந்து வரும் மாணவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com