ரஜினி கட்சி தொடங்க பா.ஜனதா நெருக்கடி என்பதா?- குஷ்பு ஆவேசம்

ரஜினி அரசியலுக்கு வருவதற்கு காரணம் பா.ஜனதாவின் நெருக்கடி தான் என்று சில கட்சிகள் சொல்வதற்கு காரணம் அவர்களின் தவறுகளை மறைப்பதற்குத்தான் என குஷ்பு கூறியுள்ளார்.
குஷ்பு
குஷ்பு
Published on

சென்னை:

ரஜினி கட்சி தொடங்குவது பற்றி பா.ஜனதாவை சேர்ந்த குஷ்பு கூறியதாவது:-

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கலாம்.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பல ஆண்டுகளாக எதிர்பார்த்த நிலையில் இப்போது வந்திருக்கிறார். சந்தோசம்தான். வரவேற்கிறேன்.

நாட்டுக்கு நல்லது செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். முதலில் கமல் வந்தார். இப்போது ரஜினி வந்திருக்கிறார். ஆனால் இதனால் அரசியல் மாற்றம் ஏற்படுமா என்பதை இப்போது சொல்ல முடியாது. தேர்தல் களத்தை இப்போதே யாராலும் கணிக்க முடியாது.

ஓட்டுப்பதிவு முடிந்து ரிசல்ட் வந்தபிறகுதான் மாற்றம் தெரியும். தமிழக அரசியலில் இப்போதுதான் முதல் முறையாக கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு தலைவர்கள் இல்லாமல் தேர்தலை சந்திக்க போகிறோம்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு கலைஞர், ஜெயலலிதா ஆகியோரது அரசியல் சாணக்கியத்தனத்தைதான் இதுவரை பார்த்து வந்தோம். இப்போது முதல் தடவையாக எடப்பாடி பழனிசாமியும், மு.க.ஸ்டாலினும், முதல்வருக்கான போட்டியில் இறங்கி இருக்கிறார்கள்.

ரஜினி அரசியலுக்கு வருவதற்கு காரணம் பா.ஜனதாவின் நெருக்கடி தான் என்று சில கட்சிகள் சொல்வதற்கு காரணம் அவர்களின் தவறுகளை மறைப்பதற்குத்தான்.

ரஜினி அரசியலுக்கு வந்தாலும் குற்றம். வராவிட்டாலும் குற்றம் சொல்வது எந்த வகையில் நியாயம்? ரஜினி அரசியலுக்கு வருவதற்கு காரணம் பா.ஜனதாவின் நெருக்கடி என்பவர்கள் அவர் வராமல் இருந்திருந்தால் அதற்கும் பா.ஜனதாதான் காரணம் என்று சொல்வார்களா?

ரஜினி பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பாரா என்பதை என்னால் சொல்ல முடியாது. இது பற்றி டெல்லி தலைமையும் ரஜினியும் தான் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com