ஊரடங்கால் வாழைத்தார்கள் விலை கடும் வீழ்ச்சி

ஊரடங்கால் வாழைத்தார்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனால், தங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
நொய்யல் பகுதியில் வியாபாரத்திற்காக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள்.
நொய்யல் பகுதியில் வியாபாரத்திற்காக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள்.
Published on

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கொங்கு நகர், கோம்பு பாளையம், நடையனூர், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், புகளூர், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, பச்ச நாடன், மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழைகளை பயிரிட்டுள்ளனர்.

வாழைத்தார்கள் நன்கு விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் வெட்டப்பட்டு வியாபாரிகளுக்கும், பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 7-ந் தேதி வரை தளர்வில்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாலும், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளதாலும், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாலும் விளைந்த வாழைத்தார்களை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

ஒரு சில விவசாயிகள் வெட்டிய வாழைத்தார்களை சாலையோரம் வைத்து விற்று வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாத போது பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.350-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவல்லி ரூ.350-க்கும், ரஸ்தாளி ரூ.350-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ. 500-க்கும் விற்பனையானது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையில் நேற்று பூவன் வாழைத்தார் ரூ.100-க்கும், பச்சை நாடன் ரூ.120-க்கும், கற்பூரவள்ளி ரூ.250-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் கவலை அடைந்த விவசாயிகள் தங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com