சூரப்பா மீதான புகார்- விசாரணை அலுவலகத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஆஜர்

சூரப்பா மீதான புகாரை விசாரிக்கும் விசாரணை அலுவலகத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி நேரில் ஆஜரானார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆவணங்கள் 3 பெட்டிகளில் ஒப்படைக்கப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா
Published on

சென்னை:

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் தொடர்பான விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நியமனம் செய்யப்பட்டார். அவரும் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக அலுவலகம் மற்றும் கூடுதல் அதிகாரிகள், பணியாளர்கள் கேட்டு உயர்கல்வித்துறைக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதன்படி, உயர்கல்வித்துறை இணைச் செயலாளர் எம்.எஸ்.சங்கீதா (முழு கூடுதல் பொறுப்பு), லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.பொன்னி (முழு கூடுதல் பொறுப்பு), சென்னை ஐகோர்ட்டின் சிறப்பு அரசு பிளீடர் எம்.கார்த்திக்கேயன் (முழு கூடுதல் பொறுப்பு), எஸ்.சாய்பிரசாத் (வக்கீல்), கே.முத்து (ஓய்வுபெற்ற அரசு கூடுதல் செயலாளர்) ஆகியோரை நியமனம் செய்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.

விசாரணையை மேற்கொள்வதற்காக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பொதிகை இல்லம் விசாரணை அலுவலகமாக வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை ஐகோர்ட்டில், ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணையை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சூரப்பா மீதான விசாரணை தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆவணங்களை கேட்டு இருந்ததாகவும், இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கருணாமூர்த்தி நேரில் ஆஜராக நீதிபதி கலையரசன் சம்மன் அனுப்பி இருப்பதாகவும் நேற்று முன்தினம் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கருணாமூர்த்தி நேற்று பிற்பகல் 2.35 மணிக்கு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள விசாரணை அலுவலகத்துக்கு நேரில் வந்தார். அவருடன் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் சிலரும் வந்திருந்தனர்.

மேலும் சூரப்பா பதவியேற்றது முதல் தற்போது வரை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகள், நியமனங்கள், டெண்டர்கள் உள்பட சில ஆவணங்கள் அடங்கிய 3 பெரிய பெட்டிகள் விசாரணை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

பிற்பகல் 2.35 மணியளவில் விசாரணை அலுவலகத்தில் ஆஜரான பதிவாளர் கருணாமூர்த்தி, 3.40 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை அலுவலகத்தில் அவர் இருந்தார். விசாரணை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம், ‘விசாரணைக்குழு கேட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து இருக்கிறோம். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பை நாங்கள் வழங்கி வருகிறோம்’ என்றார். அண்ணா பல்கலைக்கழகம் ஒப்படைத்திருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை நீதிபதி கலையரசன் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் ஆவணங்களுடன் பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தியை இன்று (புதன்கிழமை) ஆஜராக நீதிபதி கலையரசன் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது சரியானது அல்ல என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com