

புதுடெல்லி:
எஸ்.சி மற்றும் எஸ்.டி வன்கொடுமை சட்ட மறுசீராய்வு மனு மீதான விசாரணையை 10 நாட்கள் ஒத்தி வைத்த சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டது.
எஸ்.சி மற்றும் எஸ்.டி வன்கொடுமை சட்டத்தை தளர்த்த வகை செய்யும் சில தீர்ப்புகளை சுப்ரீம் கோர்ட் வழங்கியிருந்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் நேற்று தலித் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறிய சூழலில் 10 பேர் இதற்கு பலியாகினர்.
இதனை அடுத்து, முன்னர் வழங்கிய தீர்ப்பை திரும்பப்பெறக் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுவை நேற்று தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், எஸ்.சி மற்றும் எஸ்.டி சட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். அப்பாவிகள் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே எங்களது நோக்கம் எனவும் குறிப்பிட்டனர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். தலித் அமைப்புகளின் போராட்டம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை புரிந்து கொள்ளாதவர்கள். சில பேரின் தூண்டுதலால் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என கூறினர்.
இதனை அடுத்து, முன்னர் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை அளிக்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணை 10 நாட்களுக்கு ஒத்தி வைத்தனர். மேலும், எதிர் மனுதாரர்கள் 2 நாட்களில் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். #TamilNews