எம்.ஜி.ஆர். பற்றி அவதூறு பேச்சு: மன்னிப்பு கேட்க மாட்டேன்- ஆ.ராசா

எனக்கு என்னென்ன தகுதியிருக்கிறது என்று சொல்வதற்கு பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை. மாநாட்டில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் முதலமைச்சர் குடும்பத்தை கேவலப்படுத்தினீர்கள்.
எம்.ஜி.ஆர். பற்றி அவதூறு பேச்சு: மன்னிப்பு கேட்க மாட்டேன்- ஆ.ராசா
Published on

கோவை:

அ.தி.மு.க நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் பற்றி ஆ.ராசா எம்.பி. அவதூறாக பேசியதாக கூறி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேற்று அ.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர்.பற்றி அவதூறாக பேசியதற்காக பாராளுமன்ற தேர்தலில் ஆ.ராசாவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார்.

தனக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது குறித்து ஆ.ராசா எம்.பி.யிடம் கோவையில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் பதில் அளித்து ஆ.ராசா எம்.பி. கூறியதாவது:-

எனக்கு என்னென்ன தகுதியிருக்கிறது என்று சொல்வதற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை. நான் அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு பதிலாக வேறு வார்த்தை பயன்படுத்தி இருக்கலாம் என கூறுகிறீர்கள்.

அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவர், முதலமைச்சரை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை, முதலமைச்சர் குடும்பத்தினரை பற்றி பேசியது தொடர்பாக ஐகோர்ட்டில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதன்பிறகு நடந்த மாநாட்டில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் முதலமைச்சர் குடும்பத்தை கேவலப்படுத்தினீர்கள். இதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி முதலில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். எம்.ஜி.ஆர் முகத்தை வைத்து தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது என பழனிசாமி கூறுகிறார். அது தனிக்கதை. அதைப்பற்றி பின்னர் தனியாக பேசுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com