

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் பல்வந்த்சிங் ராஜ்புத் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலில் அகமது படேலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்ததால் நீதிமன்றத்தை நாடினார்.
காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் இரண்டு பேர் கட்சி மாறி ஓட்டு போட்டதால் அவர்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதனால் அகமது படேல் வெற்றி பெற்றதாகவும், அந்த வாக்குகளை கணக்கில் சேர்த்திருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன் என்றும் ராஜ்புத் தனது மனுவில் கூறியிருந்தார். எம்எல்ஏக்களுக்கு அகமது படேல் லஞ்சம் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.