ரஜினிகாந்தை கார்ப்பரேட் கம்பெனிகள் இயக்குகின்றன - சரத்குமார் குற்றச்சாட்டு

ரஜினிகாந்தை கார்ப்பரேட் கம்பெனிகள் இயக்குகின்றன என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
ரஜினிகாந்தை கார்ப்பரேட் கம்பெனிகள் இயக்குகின்றன - சரத்குமார் குற்றச்சாட்டு
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். தடியடியில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலர் காயம் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில் 48 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் கூறினார். துப்பாக்கி சூட்டில் பலியானோரின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி பகுதியில் உள்ள 11 பேர் வீட்டிற்கும் சென்று சந்தித்து ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார். அவர்களில் தூத்துக்குடி மாசிலாமணிபுரம் 1-வது தெருவைச் சேர்ந்த சண்முகம் குடும்பத்தினர் மட்டும் நிதியை பெறவில்லை. மற்றவர்கள் சரத்குமார் வழங்கிய நிதியை பெற்றுக்கொண்டனர்.

நேற்று காலை ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலை பகுதியை சேர்ந்த தமிழரசன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி நிதி வழங்கினார். பின்பு உசிலம்பட்டியில் உள்ள ஜெயராமன் வீட்டிற்கும் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பொதுமக்களிடம் சிறிதளவும் வன்முறை எண்ணம் கிடையாது. அமைதியான முறையில் அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். வன்முறை எண்ணம் இருந்திருந்தால் குடும்பத்தோடு, குழந்தை-குட்டிகளோடு வந்திருப்பார்களா?

பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கக்கூடாது. எச்சரித்து கலைத்திருக்கலாம்.

100 நாட்களாக போராடிய மக்களிடம் அரசு முன் கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காது. தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம் உண்மையாகவும், நேர்மையாகவும் விசாரணை நடத்த வேண்டும்.

போராட்டம் நடத்தியவர்களை சமூக விரோதிகள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி இருப்பது கண்டனத்துக்குரியது. உணர்வுப் பூர்வமான போராட்டத்தை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.

போராட்டம் நடத்துபவர்கள் அனைவரும் சமூக விரோதிகள் என்றால் காவிரிக்காக போராடியவர்கள் சமூக விரோதிகளா? தொழில்கள் பாதிக்கும், வேலை வாய்பபுகள் பாதிக்கும் என்றெல்லாம் அவர் கூறி இருக்கிறார். இதில் இருந்து அவரை கார்ப்பரேட் நிறுவனங்கள் இயக்குகின்றன என்பது தெளிவாகிறது.

வேலை வாய்ப்பை அளிக்க வேண்டியது அரசின் கடமை. போராட்டம் என்பது மக்களின் உரிமை. அதனை தடுக்க முடியாது. சுதந்திர காலத்தில் இருந்தே மக்கள் போராடித்தான் பல உரிமைகளை பெற்றிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com