டெல்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியவர் கைது

ஹாங்காக் நகரில் இருந்து டெல்லிக்கு மின் மோட்டாரில் கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

புதுடெல்லி:

ஹாங்காங் நகரில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று நேற்று முன்தினம் வந்தது. பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர்.

இதில், தென்கொரியாவை சேர்ந்த ஒருவரை கிரீன் சேனலை கடந்து வந்த பிறகு சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவரது பதில் மழுப்பலாக இருந்ததால் அவரது உடைமைகளை முழுமையாக சோதனை செய்தனர்.

சோதனையில் அவரிடமிருந்து 5.5 கிலோ அளவிலான தங்கத் தகடுகள் கைப்பற்றப்பட்டன. அவர் கொண்டு வந்த மின் மோட்டாரின் உள்ளே ரோட்டார் பிளேட்டுகளாக மொத்தம் 105 தங்கத்தகடுகள் இருந்தது. அவற்றின் மதிப்பு  ரூ.1.92 கோடி. விசாரணையில், அந்த நபர் கடந்த வாரம் வந்தபோதும் இதே அளவிலான தங்கத்தை இதே முறையில் கடத்தியதும் தெரிய வந்தது.

விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள், வரி வசூலிக்க ஏதுவாக கிரீன் சேனல் மற்றும் ரெட் சேனல் என இரு பாதைகளை அமைத்துள்ளனர். அதாவது வரி செலுத்த தேவையில்லாத பொருட்களை கொண்டு வருவோர் கிரீன் சேனல் வழியாக செல்லவேண்டும். வரி செலுத்த வேண்டிய பொருட்கள் உடையவர்கள் ரெட் சேனல் வழியாக வெளியேற வேண்டும். தங்கம் கடத்தி வந்தவர் கிரீன் சேனல் வழியாக வந்தபோது பிடிபட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com