பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இணையும் - மத்திய மந்திரி நம்பிக்கை

அ.தி.மு.க, பா.ஜனதா கட்சிகள் இடையே நல்லுறவு நிலவி வருவதால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இணையும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார். #RamdasAthawale #ParliamentaryElection
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இணையும் - மத்திய மந்திரி நம்பிக்கை
Published on

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது ஆட்சியை தக்க வைக்கும். பிரதமர் மோடி சிறப்பான ஆட்சி நடத்துகிறார். ஏழை- எளிய மற்றும் நடுத்தர மக்களின் நல்வாழ்வுக்கு பல சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. நாடு முழுவதும் 80 இடங்களை பிடிப்பது சிரமம். காங்கிரஸ் கட்சி மீண்டும் எதிர்க்கட்சியாக தான் அமரும்.

தமிழகத்தை பொறுத்த வரை ஏற்கனவே முதல்-அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்தனர். மத்திய அரசு மக்களுக்கு தரும் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

அதே போலதான் தமிழகத்தில் ஆளும் தற்போதைய அ.தி.மு.க. அரசும் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுடன் இணக்கமாக உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற மேல்-சபை துணை தலைவர் தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது. அதேபோன்று நாங்களும் பாராளுமன்ற துணை சபா நாயகர் தம்பிதுரைக்கு (அ.தி.மு.க.) தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம்.

அ.தி.மு.க-பா.ஜனதா கட்சிகள் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. எனவே வரும் தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. சேரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com