மகாராஷ்டிரா முழு அடைப்பை வாபஸ் பெறுவதாக அம்பேத்கர் பேரன் அறிவிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் கலவரம் மேலும் பெருகாமலும், பரவாமலும் தவிர்க்கும் வகையில் இன்றைய முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா முழு அடைப்பை வாபஸ் பெறுவதாக அம்பேத்கர் பேரன் அறிவிப்பு
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒடுக்குமுறைக்கு எதிராக 200 ஆண்டுகளுக்கு முன்பு பீமா கோரேகான் என்ற இடத்தில் மிகப்பெரிய யுத்தம் நடந்தது. இதில் பேஷ்வா படையினர் 25,000 பேரும், மகர் படையினர் 500 பேரும் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக பீமா கோரேகானில் வெற்றி தூண் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதியன்று இந்த நினைவு தூணுக்கு தலித்துகள் ஒன்றுதிரண்டு வீர வணக்கம் செலுத்துவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு பீமா கோரேகான் வெற்றியை கொண்டாடுவது தேச துரோகம் என கூறி இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதை மீறி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தலித்துகள் பீமா கோரேகானில் திரண்டனர். இதனால் அங்கு இரு தரப்புனருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அரசு பஸ்கள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. புனேயில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

புனேயில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடைபெற்றது. மும்பை, அவுரங்காபாத், தானே நகரங்களுக்கும் கலவரம் பரவியது. மும்பையில் 40 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. மும்பையில் பள்ளிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. மும்பை புறநகர் மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த வன்முறை குறித்து விசாரணைக்கு மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உயிர் இழந்த தலித் இளைஞர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

வன்முறையை கண்டித்து மகாராஷ்டிரத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் தலித் அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து மும்பை மற்றும் புனேயில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெருமளவில் போலீசாரும், ராணுவ படையினரும் குவிக்கப்பட்டனர். 

மாநிலத்தின் பல பகுதிகளில் பஸ்கள் மற்றும் பொது வாகன போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. கர்நாடகத்தில் இருந்து மும்பை, புனே நகருக்கு செல்லும் பஸ்களும் நிறுத்தப்பட்டன. பந்த் காரணமாக டப்பா வாலாக்கள் பணி பாதிக்கப்பட்டது. இதனால் அலுவலகத்தில் பணியாற்று பவர்கள் சாப்பாடு கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

மும்பை-புனே இடையே பல இடங்களில் சாலைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். இதில் 150 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. பல இடங்களில் ரெயில் மறியல், சாலை மறியல் நடந்தது. மும்பையில் கடைகளை அடைக்க கோரி மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், கலவரம் மேலும் பெருகாமலும், பரவாமலும் தவிர்க்கும் வகையில் முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் இன்று மாலை அறிவித்துள்ளார்.  #tamilnews #Maharashtrabandh #BhimaKoregaonViolence #PrakashAmbedkar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com