மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டு நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்

முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு புதுவை மாநிலத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்களை கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ளார்.
புதுவை கவர்னர் கிரண்பேடி
புதுவை கவர்னர் கிரண்பேடி
Published on

புதுச்சேரி:

புதுவையில் கொரோனா நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.995 கோடி புதுவை அரசு கேட்டு வருகிறது. மாநிலங்களுக்கு நிதி அளித்துள்ள மத்திய அரசு புதுவைக்கு நிதி அளிக்காமல் பாரபட்சம் காட்டுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் மத்திய அரசு புதுவை மாநிலத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்களை கவர்னர் கிரண்பேடி வெளியிட்டு கூறியிருப்பதாவது:-

பிரதான் மந்திரி ஜன்தன் யோஜானா திட்டத்தின் கீழ் 83 ஆயிரம் பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.4 கோடியே 15 லட்சம் வங்கி கணக்கில் போடப்பட்டுள்ளது. விவசாயிகள் 9,299 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 85 லட்சம் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு அரிசி தருவதற்காக 9,425 மெட்ரிக் டன் அரிசியை அனுப்பியுள்ளது.

ஏழை, முதியோர்கள், விதவைகள், ஊனமுற்றோருக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் ரூ.1.கோடியே 43 லட்சம் வழங்கியுள்ளது. கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினக்கூலியை ரூ.229லிருந்து ரூ.259 ஆக உயர்த்தியுள்ளது. 13,526 ஏழை குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு வாங்குவதற்கு ரூ.80 லட்சம் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.

இவ்வாறு கிரண்பேடி அதில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com