விலை உயர்வுக்கு எதிர்ப்பு- வெங்காய மாலை அணிந்து நாராயணசாமி போராட்டம்

வெங்காய விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி வெங்காய மாலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி வெங்காய மாலை அணிந்தபடி, மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்தபோது எடுத்த படம்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி வெங்காய மாலை அணிந்தபடி, மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்தபோது எடுத்த படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் மோடி தலைமையிலான மக்கள் விரோத மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் இந்திய அரசியல் சாசனத்தை சீர்குலைத்து, பிரிவினையை தூண்டும் நோக்கத்துடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சஞ்சய்தத் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் விஜயவேணி எம்.எல்.ஏ., உள்பட பல்வேறு அணிகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அகில இந்திய பொதுச்செயலாளர் சஞ்சய்தத் மற்றும் நிர்வாகிகள் பலர் வெங்காய மாலை அணிந்தபடி, மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com