

கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பற்றி சட்டப்பேரவையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
கோவை மாநகரம், ரத்தினபுரி காவல் நிலைய சரகம், காந்திபுரம், 2-வது வீதி விரிவு என்ற முகவரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோவை மாவட்டக்குழு அலுவலகம் இயங்கி வருகிறது. அந்த அலுவலகத்தில், ஆனந்தன் என்பவர் முழுநேர ஊழியராகவும், ஓட்டுநராகவும் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 17.6.2017 அன்று காலை வழக்கம் போல் ஆனந்தன் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு 7 மணியளவில் கட்சி அலுவலகம் வந்த போது, தீப்பற்றி எரிந்தது போன்ற வாசனையை உணர்ந்திருக்கிறார். அவர் அலுவலக வளாகத்தினுள் சென்று பார்த்தபோது, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் வலது பக்க கதவுகளில் கரும்புகை படிந்திருந்ததையும், அதே போன்று அலுவலக ஜன்னல் ஒன்றில் கரும்புகை படிந்திருந்ததையும் பார்த்துள்ளார்.
மேலும், கீழே மண்எண்ணெய் வாசனையுடன் கூடிய ஒரு கண்ணாடி பாட்டில் மற்றும் கருகிய நிலையில் பெட்ரோல் வாசனையுடன் கூடிய ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கிடந்ததையும் பார்த்துள்ளார்.
இது தொடர்பாக, ஆனந்தன் ரத்தினபுரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று, தடய அறிவியல் நிபுணர் குழுவினரையும், துப்பறியும் மோப்ப நாய் பிரிவினரையும், மற்றும் வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்க செய்யும் குழுவினரையும் அங்கு வரவழைத்து, தடயங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக, காவல் துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து, எதிரிகளைக் கண்டுபிடித்து கைது செய்ய பல்வேறு கோணங்களில் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.