

புதுடெல்லி:
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய முத்தலாக் தடை சட்டத்தை ரத்து செய்யக்கோரி சமஸ்த கேரளா ஜமியத்துல் உலமா, சய்யத் பரூக், ஜமியத் உலமா ஏ ஹிந்த் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே மனுதாக்கல் செய்து உள்ளன. இந்த மனுக்கள் மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு கடந்த மாதம் 23-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் முஸ்லிம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பின் சார்பில், முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும் இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கனவே இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிற மனுக்களுடன் சேர்த்து இந்த மனு விசாரிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.