

ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம் பெற தகுதி பெற வேண்டும் என்றால், ஊழியகர்கள் கட்டாயமாக 10 ஆண்டுகள் வரை PF நிதியில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும் என்றும் இடையில் முழு பணத்தை எடுக்க கூடாது என்றும் தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவுறுத்தியுள்ளது.
தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட தொகை, அவர்களின் எதிர்கால தேவைக்காக தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதியில் சேமிக்கப்படுகிறது. அதற்கு ஆண்டுதோறும் வட்டி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 10 ஆண்டுகள் நிறைவடையும் முன்பே வைப்பு நிதி பணத்தை முழுமையாக எடுப்பது, ஊழியரின் மொத்த பணிக்காலத்தின் தொடர்ச்சியை பாதிக்கும்.
இதனால் இடைவெளி ஏற்பட்டு, 10 ஆண்டுகள் கணக்கில் வராமல் போகலாம்.
இறுதியில் ஓய்வுக்குப் பின் மாதாந்திர ஓய்வூதியம் பெறும் தகுதியை உறுப்பினர்கள் இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே அவசர தேவைகளுக்காக PF நிதியை எடுப்பதற்கு முன், அது எதிர்கால ஓய்வூதியத் தகுதியைப் பாதிக்குமா என்பதை உணர்ந்து உறுப்பினர்கள் முடிவெடுக்க வேண்டும்.
தங்களின் EPF கணக்கு பதிவுகள் மற்றும் Service recordஐ அவ்வப்போது சரிபார்த்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி அமைப்பின் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரியம், ஆண்டுதோறும் வட்டி விகிதத்தை முடிவு செய்கிறது.
2025-2026 நிதியாண்டுக்கு 8.25 சதவீத வட்டிவிகிதம் வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் இந்த மாதம் அளித்தது.
இதையடுத்து, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் உத்தரவுப்படி, 7 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களின் கணக்குகளுக்கு 8.25 சதவீத வட்டி விகிதம் இம்மாதம் வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்மூலம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கு 2023-2024 நிதியாண்டில் இருந்து தொடர்ந்து 3-வது ஆண்டாக 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.