

வந்தே மாதரம் தேசியப் பாடலின் முதல் இரண்டு அடிகள் மட்டுமே கட்சி நிகழ்வுகளில் பாடப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அனைத்து அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் இசைக்க வேண்டும் என மத்திய பாஜக அரசு நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றி சட்டமாக்கியது.
6 அடி கொண்ட 3 நிமிடம் 10 வினாடிகள் நீளமுள்ள வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.
கடந்த வாரம் நடந்த 80வது சுதந்திரத்தினவிழாவில் காங்கிரஸ் தலைமையகத்தில் வந்தே மாதரம் இசைக்கும்போது அதை பாதியில் நிறுத்துமாறு சோனியா காந்தி சைகை செய்ததாக பாஜக குற்றம்சாட்டியது.
ஆனால் மூத்த தலைவர் கார்கே அமர நாற்காலி எடுத்து வரவே சோனியா சைகை செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.
நேற்று டெல்லியில் நடைபெற்ற நான்கு மணி நேரத்திற்கும் மேலான செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் ஜெயராம் ரமேஷ் ஆகியோர் இத்தகவலைத் தெரிவித்தனர்.
1937ஆம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழு தீர்மானத்தை மீண்டும் உறுதி செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அக்டோபர் 28, 1937 அன்று மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் மௌலானா அசாத் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் செயற்குழு முதல் முறையாக இத்தீர்மானத்தை நிறைவேற்றியது.
பங்கிம் சந்திரர் எழுதிய 'ஆனந்தமடம்' நாவலில் இடம்பெற்ற வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் தாய்நாட்டைப் போற்றுவதாகவும், பிந்தைய சரணங்கள் குறிப்பிட்ட மத மற்றும் புராண குறியீடுகளைகொண்டிருப்பதாகவும் அமைந்துள்ளன.
எனவே, அனைத்துத் தரப்பு மக்களும் இணையும் தேசிய நிகழ்வுகளுக்கு முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பொருத்தமானவை என ரவீந்திரநாத் தாகூர் ஜவஹர்லால் நேருவுக்குக் கடிதம் மூலம் ஆலோசன வழங்கினார்.
சுதந்திரத்தின் பின் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அறிவித்தபடி, 'ஜன கண மன' தேசிய கீதமாகவும், 'வந்தே மாதரம்' தேசியப் பாடலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.