உங்கள் மதம் ஆபத்தில் உள்ளது என்று சொல்பவர்களின் கட்சிதான் ஆபத்தில் உள்ளது- ரித்தேஷ் தேஷ்முக்

வேலை செய்யாதவர்களுக்கு தான் மதம் தேவைப்படுகிறது.எங்கள் மதத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.
உங்கள் மதம் ஆபத்தில் உள்ளது என்று சொல்பவர்களின் கட்சிதான் ஆபத்தில் உள்ளது- ரித்தேஷ் தேஷ்முக்
Published on

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கு வரும் நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் மாகாயுதி [பாஜக - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் - ஷிண்டே சிவசேனா] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன.

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் பாஜக தேர்தல்களின்போது கையில் எடுக்கும் வழக்கமான அஸ்திரமான இந்துக்களே ஒன்றுபடுங்கள், தனித்தனியாகி இருந்தால் ஆபத்து என்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முழக்கத்தை தூக்கிப் பிடித்து பிரசாரம் செய்து வருகிறது.

இது இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது வெறுப்பை உண்டுபண்ணும் பிளவுவாத அரசியல் யுக்தி என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சில நாட்கள் முன்னர் தூலேவில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியும் இந்த கோஷத்தை எழுப்பினார்.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும் பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தனது சகோதரர்களான அமித் மற்றும் தீரஜ் தேஷ்முக்கிற்காக ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

லத்தூர் நகரம் தொகுதியில் அமித் தேஷ்முக்கும் லத்தூர் கிராமம் தொகுதியில் தீரஜ் தேஷ்முக்கும் போட்டியிடுகின்றனர்.

லத்தூர் கிராமம் தொகுதியில் போட்டியிடும் தீரஜ் தேஷ்முக்கிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ரித்தேஷ் தேஷ்முக், "உங்கள் மதம் ஆபத்தில் உள்ளது என்று வாக்குக் கேட்பவர்களின் கட்சிதான் உண்மையில் ஆபத்தில் உள்ளது. நேர்மையாக உழைப்பவர்கள் தர்மம் செய்கிறார்கள். வேலை செய்யாதவர்களுக்கு தான் மதம் தேவைப்படுகிறது. எங்கள் மதத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று அவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் முதலில் வளர்ச்சியை பற்றி பேசுங்கள்.

மகாராஷ்டிராவில் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை, அவர்களுக்கு வேலை வழங்குவது அரசின் பொறுப்பு, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. 2019 சட்டமன்றத் தேர்தலில், தீரஜ் 1.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலிலும் எதிர்க்கட்சி வேட்பாளர் டெபாசிட் இழக்கும் வகையில் தீரஜ்க்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com