போர்ஷே இடையே $1.4 பில்லியன் மெகா ஒப்பந்தம்: $373 மில்லியனில் MHP நிறுவனத்தை கைகப்பற்றுகிறது TCS

கையகப்படுத்தலுக்குப் பிறகும் MHP தனது சொந்த பெயரிலேயே தனித்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TCS acquires MHP
Published on

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு விளையாட்டு கார்கள் தயாரிப்பு நிறுவனமான போர்ஷேவின் துணை நிறுவனமான 'MHP மேனேஜ்மென்ட்' அமைப்பைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.

சுமார் $373 மில்லியன் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹3,100 கோடிக்கும் மேல்) மதிப்பிலான இந்த கையகப்படுத்தல், இரு நிறுவனங்களுக்கும் இடையிலான $1.4 பில்லியன் மதிப்பிலான 5 ஆண்டு கால மூலோபாய கூட்டாண்மையின் ஒரு முக்கிய பகுதியாகும்.

வாகனத் தொழில் மேம்பாடு

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், போர்ஷேவின் பொறியியல், உற்பத்தி, வாடிக்கையாளர் சேவை மற்றும் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தொழில்நுட்ப மாற்றத்தைக் கொண்டு வருவதாகும். மேலும், அடுத்த தலைமுறை வாகனத் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மென்பொருள் அடிப்படையிலான வாகன தளங்களை உருவாக்க TCS மற்றும் போர்ஷே இணைந்து செயல்படும்.

MHP நிறுவனம் ஐரோப்பாவில் டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் உற்பத்தி டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய துறைகளில் சிறந்த அனுபவம் கொண்டது. கையகப்படுத்தலுக்குப் பிறகும் MHP தனது சொந்த பெயரிலேயே தனித்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவன தலைவர்களின் கருத்துக்கள்

TCS தலைமைச் செயல் அதிகாரி கிருதிவாசன் கூறுகையில், AI மற்றும் தரவு அறிவியல் வாகனத் துறையை மறுவரையறை செய்து வரும் வேளையில், TCS-ன் AI திறன்களும் MHP-ன் வாகன ஆலோசனைக் கூர்மையும் இணைந்து போர்ஷே நிறுவனத்தில் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தும் என்றார்.

போர்ஷே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் மைக்கேல் லைட்டர்ஸ், தனது நிறுவனம் தனது முதன்மை கார்ப்பரேட் இலக்குகளில் கவனம் செலுத்துவதற்காக MHP பங்கு பரிமாற்றத்தை மேற்கொண்டதாகவும், TCS போன்ற ஒரு வலுவான தொழில்நுட்ப பங்காளியைக் கண்டறிந்துள்ளது தங்களின் உலகளாவிய போட்டியை மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

தொழில்துறை தாக்கம்

நெதர்லாந்தில் உள்ள TCS-ன் துணை நிறுவனம் மூலம் இந்த பங்கு கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்குப் பிறகு, அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் இந்த கையகப்படுத்தும் நடவடிக்கை முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலகளாவிய கூட்டணி மூலம் TCS நிறுவனம் ஐரோப்பிய உற்பத்தி மற்றும் வாகனத் தொழில் சந்தையில் தனது AI மற்றும் தொழில்நுட்ப ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com