நீட் முறைகேடு: குஜராத்தில் தனியார் பள்ளி உரிமையாளர் கைது

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் பலரை சிபிஐ கைது செய்தது.
நீட் முறைகேடு: குஜராத்தில் தனியார் பள்ளி உரிமையாளர் கைது
Published on

நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். ஜூன் 4-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.

இதற்கிடையே நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்தியா முழுவதும் மாணவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அதனால் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் பலரை சிபிஐ கைது செய்தது.

இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளர் தீக்சித் படேலை சிபிஐ கைது செய்துள்ளது.

இவரது பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர் அசானுல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் இது குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்க ராகுல் காந்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com