மத்தியிலும், மாநிலத்திலும் புதிய ஆட்சி மலரும்- புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலும் விரைவில் புதிய ஆட்சி மலரும் என்று நாராயணசாமி கூறியுள்ளார். #narayanasamy #mkstalin #rahulgandhi
மத்தியிலும், மாநிலத்திலும் புதிய ஆட்சி மலரும்- புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி
Published on

மதுரை:

மதுரை வந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மோடி ஆட்சி அவலம் குறித்து பிரசாரம் செய்துள்ளோம். தேர்தல் முடிவுகள் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலும் விரைவில் புதிய ஆட்சி மலரும்.

தமிழகத்தில் நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், புதுவை தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும்.

தமிழகத்தை மோடி புறக்கணித்து வருகிறார். தமிழக அரசு கஜா புயல் நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி நிதி கேட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.500 கோடி மட்டுமே கொடுத்தது.

தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுவையில் பானி புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்கொள்ள புதுவை அரசு தயாராக உள்ளது.

டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்வதன் மூலம் ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் வந்துள்ளது. எதிர்க்கட்சியின் பலத்தை உடைக்க அ.தி.மு.க. அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஜனநாயக நாட்டில் சபாநாயகரின் இந்த செயல் எல்லை மீறியது.

18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலையாகும். சபாநாயகர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடி தென் மாநிலங்களை புறக்கணித்ததால் தான் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார்.

வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து உள்ளது என்பதை சில மாதங்களுக்கு முன்பு நடந்த 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ஜே.காமராஜ், செய்யது பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். #narayanasamy #mkstalin #rahulgandhi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com