

சென்னை:
சீனாவின் புடியான் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழகத்தின் தங்க மங்கையான இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவன் (20), இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், 250.8 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார்.
சீனியர் பிரிவில் இளவேனிலுக்கு கிடைக்கும் இரண்டாவது தங்கம் இதுவாகும். இதற்கு முன், கடந்த ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியிலும் இளவேனில் தங்கம் வென்றார்.
இந்நிலையில், உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்றில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை இளவேனிலலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சீனாவில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
தங்க மங்கையின் வெற்றி தமிழகத்திற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளது என பதிவிட்டுள்ளார்.