சென்னை மாநகர எல்லைக்குள் வருகிறது மீனம்பாக்கம் - அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை மாநகர எல்லைக்குள் வருகிறது மீனம்பாக்கம் - அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னையுடன் மீனம்பாக்கம் இணைகிறது என்று சட்டசபையில் அமைச்சர் உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். #TNAssembly #MinisterUdayakumar
Published on

சென்னை:

பல்லாவரம் இ.கருணாநிதி சட்டசபையில் இன்று மீனம்பாக்கம், பொழிச்சலூர், திரிசூலம் பகுதிகள் பல்லாவரம் தாசில்தார் அலுவலக கட்டுப்பாடடின் கீழ் கொண்டு வரப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “ஏற்கனவே பொழிச்சலூர், பல்லாவரம் தொகுதியில் உள்ளது. மீனம்பாக்கம் கிராமம் சென்னை மாவட்டத்துடன் இணைகிறது, திரிசூலம் பல்லாவரம் வட்டத்துடன் இணையும். சென்னை மாவட்ட விரிவாக்கப்பணி தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. வருகிற ஜூலை மாத இறுதியில் விரிவாக்கப் பணி முடிவடைந்து செயல்படும்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “சென்னை மாநகராட்சிக்கு இணையாக வருவாய் மாவட்டத்திலும் ஒரே மாதிரியான ஆட்சி எல்லைகள் வரும் வகையில் மாவட்ட எல்லைகள் விரிவுபடுத்தப்படுகிறது” என்றார்.

தொடர்ந்து இ.கருணாநிதி:- 3 நகர நிர்வாகத்துக்கு ஒரு வி.ஏ.ஓ.தான் உள்ளார். பல்லாவரம் நகர வி.ஏ.ஓ. அனகாபுத்தூர் சென்று பணியாற்றுகிறார். எனவே ஒரு கிராமத்துக்கு ஒரு வி.ஏ.ஓ. பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 10,000 பட்டாக்களை பம்மல், அனகாபுத்தூருக்கு வழங்க வேண்டும்” என்றார்.

இதற்கு அமைச்சர் உதயகுமார் பதில் அளிக்கையில், “அரசு இதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார். #TNAssembly #MinisterUdayakumar

X

Maalai Malar
www.maalaimalar.com