அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டேன்: செங்கோட்டையன் மறுப்பு

பெருங்களத்தூரில் நடைபெற்ற பள்ளி விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டேன்: செங்கோட்டையன் மறுப்பு
Published on

தாம்பரம்:

சென்னை பெருங்களத்தூரிலுள்ள அரசு பள்ளியில் எ.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடந்தது. இதை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் ஜெயகுமார், பென்ஜமின், திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையனிடம் நிரூபர்கள், சபாநாயகர் தனபாலை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று திவாகரன் கருத்து கூறியுள்ளாரே? சசிகலாவை நீக்க வேண்டும் என்று கூறிய வைத்தியலிங்கம் எம்.பி.யை கட்சியில் இருந்து டி.டி.வி. தினகரன் நீக்கியுள்ளாரே என்று கேள்வி கேட்டனர். அதற்கு கட்சி தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என்று கூறி செங்கோட்டையன் பதில் அளிக்க மறுத்தார்.

பின்னர் நீட் தேர்வு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து செங்கோட்டையன் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வரும் எந்தவித தேர்வையும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் 54 ஆயிரம் கேள்வி பதில்கள், வரைபடங்களுடன் புத்தகமாக தயாரிக்கும் பணி நடந்துவருகிறது. உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இன்னும் 1 1/2 மாதத்தில் இந்த புத்தகம் வெளிவரும்.

மேலும் மத்திய அரசின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு 450 பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக முதலில் 10 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் எந்த தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் தமிழக மாணவர்கள் வளர்ச்சி பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com